ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதியும், மு.க.ஸ்டாலின்தான் காரணம் - எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே தி.மு.க. தான். ஆண்டவன் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை கொடுப்பான் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டது.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தி.மு.க, அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, எடப்பாடி பேசியதாவது - "ஜெயலலிதா யாரால் இறந்தார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு தவறான, அவதூறான பிரசாரத்தை நாட்டில் பரப்புகிறார்கள்.

ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை கண்டிப்பாக தண்டனை கொடுக்கும். ஜெயலலிதா நன்மதிப்புடன் சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி கொண்டிருந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து நீதிமன்றமே அவரை நிரபராதி என்று கூறி விட்டது.
ஆனாலும் அவர் வெளியே வந்தபிறகு, அவர் மீது வீண்பழி சுமத்தி மேல்முறையீட்டு வழக்கு போட்டு அவருக்கு மன உளைச்சலை இவர்கள் ஏற்படுத்தினார்கள். இதனாலேயே அவர் உரிய சிகிச்சை பெறமுடியாமல் துரதிருஷ்டவசமாக இந்த மண்ணை விட்டு மறைந்து போனார். இதற்கு காரணம் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான் என்பதை மக்கள் அறிவார்கள் என்றார்.