ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் -முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல திருவுருவச் சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
அதே போல. காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா வளாகம்’ என பெயர் சூட்டி திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ், அதிமுக அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, சோதனைகளை வென்று காட்டியவர் ஜெயலலிதா என்றும் பெண்கள், குழந்தைகளுக்கு அரணாக தமிழக அரசு இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 24ல் ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்த முதல்வர், மெரினாவில் திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும் என தெரிவித்தார்.