முதல்வருக்கு அம்னீசியா வந்துருச்சுனு நினைக்குறேன் - அதிமுக ஜெயக்குமார்
நடந்த நிகழ்வுகளை மறக்கும் அம்னீசியா நோய் முதல்வருக்கு முக ஸ்டாலினுக்கு வந்துவிட்டது என தான் நினைப்பதாக அதிமுகவின் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார்.
முக ஸ்டாலின் கருத்து
நாடாளுமன்றத்தில் சில நாட்கள் முன்பு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி திமுக" என அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதில் கருத்து தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் நேற்று இது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.அப்போது அவர், நிர்மலா சீதாராமன் உண்மை தெரியாமல், வாட்ஸ்ஆப் கருத்துக்களை தெரிவித்துள்ளார் என விமர்சனம் செய்தார்.
ஜெயக்குமார் பதிலடி
முதல்வர் முக ஸ்டாலினின் இந்த கருத்திற்கு அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் தடாலடியாக பதிலளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய ஜெயக்குமார், "தவளை தன் வாயால் கெடும் என சொல்லப்படுவதை போல திமுகவுக்கு கேடுகாலம் ஆரம்பித்துவிட்டது என குறிப்பிட்டு, அதனால்தான் வரலாற்றையே திரித்து பேசும் அளவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் என சாடினார்.
1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதியை பொறுத்தவரை அது ஒரு கறுப்பு நாள் என கூறி, ஜெயலலிதாவை கீழே தள்ளி அவரது சேலையை இழுத்து, அவரை காலால் மிதித்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டார்கள் என தெரிவித்தார்.
அன்றைய பத்திரிகைகளில் கூட நீங்கள் இந்த செய்தியை பார்க்கலாம் என கூறி, அப்படி இருக்கும் போது, இந்த சம்பவமே நடைபெறவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுவதை பார்த்தால், அவருக்கு கடந்த காலத்தை மறக்கடிக்கும் அம்னீசியா நோய் வந்துவிட்டதாக அர்த்தம்" என ஜெயக்குமார் கூறினார்.