சனாதன விவகாரம்....உதயநிதி ஒரு கத்துக்குட்டி ...அதிமுக ஜெயக்குமார் கண்டனம்
உதயநிதி சனாதன விவகாரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
உதயநிதி பேச்சு - ஜெயக்குமார் கண்டனம்
அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு மிகவும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல கட்சி பிரமுகர்களும் இது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதியின் கருத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
திராவிடம் என்றும் பிறகு சனாதனம் என்றும் மாறி மாறி கூறி திமுக மக்களை ஏமாற்றி வருகிறது என குற்றம்சாட்டிய அவர், இதுபோன்ற செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உதயநிதியின் பேச்சு வெறுக்கத்தக்க ஒன்று என கண்டனம் தெரிவித்து உண்மையில் இது ஒரு திசை திருப்புகின்ற முயற்சி என குற்றம்சாட்டி இருக்கிறார். தமிழகத்தில் பல பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரியும் நிலையில், அவற்றின் மீது மக்களின் கவனம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே, திசைதிருப்புகின்ற முயற்சியாக சனாதனத்தை உதயநிதி கையில் எடுத்திருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.
உதயநிதி ஒரு கத்துக்குட்டி
அதிமுகவை அழித்துவிடுவோம் என உதயநிதி ஸ்டாலினின் தாத்தா கருணாநிதியாலேயே அது முடியவில்லை என கூறி, அவருடைய மகன் முதல்வர் மு.க.ஸ்டாலினாலும் முடியவில்லை என தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் ஒரு கத்துக்குட்டி என விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆயிரம் கத்துக்குட்டிகள் வந்தாலும், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என கூறிய ஜெயக்குமார், தமிழ்நாட்டை 31 ஆண்டுகள் ஆண்ட கட்சி என்றால் அது அதிமுகதான் என்றும் கடந்த 2021 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால், திமுக அத்துடன் காணாமல் போயிருக்கும்" எனத் தெரிவித்தார்.