வரி செலுத்தாததால் தனது பதவியை ராஜிநாமா செய்தார் துணை நிதியமைச்சர்!
தனது நிறுவனம் வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார் ஜப்பான் துணை நிதியமைச்சர்.
துணை நிதியமைச்சர்
ஜப்பானின் துணை நிதியமைச்சராக இருப்பவர் கென்ஜி காண்டா. இவர் தனது நிறுவனம் வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை அடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த 2013 மற்றும் 2022ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் வரி செலுத்தாத காரணத்தால் அரசாங்கம் இவரது நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துக்களை 4 முறை பறிமுதல் செய்ததாக ஆளும் கட்சியை சேர்ந்த கென்ஜி காண்டாவே ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
ராஜிநாமா
கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வில் பேசிய கென்ஜி "தேசிய அரசியல் விவகாரங்களில் நான் பிசியாக இருந்ததால், இந்த விவகாரங்கள் குறித்து அறியவில்லை என்று பேசினார்.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எதிர் கட்சி உறுப்பினர்கள், கென்ஜி காண்டா வரி செலுத்தாதது, மக்களிடையே வரிசெலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினர். இதனையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார் கென்ஜி காண்டா.
மேலும், ஜப்பானின் பிரதான எதிர்கட்சித் தலைவரான கெண்டா இசுமி, துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டாவை பதவி விலகுமாறு வலியுறுத்தினார். இந்நிலையில் தனது பதவியை கென்ஜி காண்டா ராஜிநாமா செய்துள்ளார்.