வேண்டுமென்றே தவறு செய்து சிறை செல்ல விரும்பும் பெண்கள் - என்ன காரணம்?
ஜப்பானில் வயதான பெண்கள் பலரும் வேண்டுமென்ற குற்றம் செய்து விட்டு சிறைக்கு வருகிறார்கள்.
சிறை தண்டனை
குற்றம் செய்பவர்களுக்கும் தண்டனையாகவும் அவர்களை சீர்திருத்துவதற்காகவும் சிறைகளில் அடைப்பது அணைத்து நாடுகளிலும் உள்ள நடைமுறை.
ஆனால் குற்றம் செய்யும் எவரும் சிறை தண்டனை பெற விரும்பமாட்டார்கள். எப்படியாவது வழக்கில் இருந்து தப்பவே முயல்வார்கள். சிறை தண்டனை கிடைத்தால் கூட ஜாமீன் வாங்கி வெளியே வந்து விடுவார்கள்.
சிறையும் விரும்பும் பெண்கள்
ஆனால் ஜப்பானை நாட்டை சேர்ந்த வயதான பெண்கள், ஏதேனும் குற்றத்தை செய்து விட்டு சிறையில் இருக்கவே விரும்புகிறார்கள். ஜப்பானை சேர்ந்த 81 வயதான அக்கியோ என்ற பெண், தனது 60 வயதில் உணவைத் திருடியதற்காக 2 முறை சிறையில் அடைக்கப்பட்டார், பின்னர் ஓய்வூதியத்தில் உயிர்வாழ்வது கடினம் என மீண்டும் குற்றம் செய்து விட்டு சிறைக்கு வந்துள்ளார்.
சிறை தண்டனை பெறுவதற்கு முன் அவர் தனது மகனுடன் வசித்து வந்த நிலையில், அவர் தன்னுடன் தங்குவதை விரும்பாத அவரது மகன் அவரை வெளியேறமாறு கூறியுள்ளார். சிறை தண்டனை பெற்று வந்த தன்னை மகன் எவ்வாறு பார்ப்பார் என்ற அவமானத்தில் அவர் மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை.
ஜப்பானின் வடக்கு டோக்கியாவில் நாட்டின் மிகப்பெரிய பெண்கள் சிறையான டோச்சிகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு 500 கைதிகள் உள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள்.
வயதானோர் அதிகரிப்பு
இது குறித்து பேசிய அங்குள்ள பெண் கைதிகள் பலரும், "நல்ல பொருளாதார நிலைமை இல்லாததால் சரியான உணவு கிடைப்பதில்லை, பிள்ளைகளால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகிறோம். எனவே ஏதாவது ஒரு தவறைச் செய்துவிட்டு சிறைக்கு வந்துவிடுகிறோம். இங்கு நன்றாக கவனித்து கொள்வார்கள்" என கூறுகின்றனர்.
பல வயதான கைதிகள், வெளியில் தனியாக இறப்பதை விட சிறையே விரும்பத்தக்கதாக கருதுகின்றனர் என டோச்சிகி பெண்கள் சிறை அதிகாரி தகயோஷி ஷிரநாகா தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு தரவுப்படி, ஜப்பானில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 36.25 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில், முதியோர்களின் எண்ணிக்கை 29.3 சதவீதமாக உள்ளது. ஜப்பான் உலகின் மிக வேகமாக வயதான சமூகங்களில் ஒன்றாக மாறியுள்ளது.