"அந்த பையனுக்கு பயம் இல்லை” - இங்கிலாந்து வீரரை கவர்ந்த இந்திய வீரர்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ரிஷப் பண்ட் குறித்து இங்கிலாந்து வீரர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நாளை தொடங்க உள்ளது. கடந்த முறை அடைந்த தோல்விக்கு இந்திய அணி தற்போது பதிலடி கொடுக்க காத்திருப்பதால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் அமைந்துள்ளது.
இதனிடையே இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ரிஷப் பண்ட் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் கடந்த முறை நாங்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, ரிஷப் பண்ட் நான் வீசிய ஒரு புதிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து விளாசினார். இந்தியாவில் கங்குலி கூட அப்படி ஒரு ஷாட்டை முயற்சி செய்ததில்லை.
இதுபோன்ற பேட்ஸ்மேன்களின் புதிய முயற்சிகள் நிச்சயம் பவுலர்களுக்கு சவாலான ஒன்றாக அமையும் எனவும் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா மிகவும் வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. அங்கு ஒரு பேட்ஸ்மேனை மட்டும் அவுட் செய்வதோடு எங்கள் பணி முடிந்து விடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.