ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது தடியடி : எஸ்.ஐ தலையை உடைத்த விழா குழுவினர் - 8 பேர் மீது வழக்கு பதிவு
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் கீழ் அரசூர் ஊராட்சியில் நேற்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம நிர்வாகிகள் கல்லக்குடி காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளனர். கல்லக்குடி காவல் நிலையத்தில் போலீசார் ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என்று அனுமதி மறுத்து எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை கீழ அரசூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடந்து வருவதாக தகவல் கிடைத்தது. உடனே, தகவலின் பேரில் கல்லக்குடி உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் போலீசார் கீழ அரசூர் கிராமத்திற்கு சென்றனர். அப்போது, அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று கூறிவிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக இருந்த அனைத்து பலகைகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.
அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதாக தகவல் தெரிந்து 2வது முறையும் சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு கூறி உள்ளனர். மீண்டும் 3வது முறை மாடுகளை அவிழ்த்து விடுவதாக தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கலைந்து போக சொன்ன போது அவர் மீது சரமாரியாக ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டவர்கள் ஆத்திரத்தில் கல்வீசி தாக்கினர்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மீது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயத்துடன் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலிதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி நமச்சிவாயம் இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் எஸ்.ஐ மீது தாக்குதல் நடத்தியதாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே கிராமத்தில் கடந்த சில ஆண்டு முன்பு அனுமதியின்றி நடத்திய ஜல்லிக்கட்டில் லால்குடி இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.