போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெய்பீம் - ஏமாற்றமளித்த ஆஸ்கார் குழு
ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இருந்து நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படம் இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு நவம்பரில் தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ’ஜெய் பீம்’ படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப்படம் இந்தியா மட்டுமல்லாது உலக சினிமா ரசிகர்களின் கவனத்தையும் குவித்த நிலையில் ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றது.
இதனிடையே கடந்த மாதம் ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் படங்கள் பட்டியலிலும் ‘ஜெய் பீம்’ நேரடியாக இடம்பிடித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்தத் தகுதிப் பட்டியலில் ’ஜெய் பீம்’ படத்துடன் சேர்த்து மொத்தம் 276 படங்கள் போட்டியிட்ட நிலையில் 10 படங்கள் மட்டும் தற்போது ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது.
எப்படியும் ஜெய்பீம் ஆஸ்கார் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காததால் சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதேபோல் மூன்று தேசிய விருதுகளைக் குவித்த மோகன்லாலின் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு தேர்வாகவில்லை. மேலும் ஆஸ்கர் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்குத் ’Belfast’, ‘CODA’, ’Don’t Look Up’, ‘Drive My Car’,’Dune’,’King Richard’, ’Licorice Pizza’, ’Nightmare Alley’, ‘The Power of the Dog’,’West Side Story’ ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.