கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரவீந்திர ஜடேஜா? - குழப்பத்தில் ரசிகர்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெறப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்திய அணி வரும் டிசம்பர் 16 ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் பெயர் இடம் பெறவில்லை. இதனிடையே நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா தற்போது ஓய்வு அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை. சிறிய காயம் தான் ஏற்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயத்தின் தன்மை மிகப்பெரிதாக இருப்பதாக கூறப்படுகிறது. முழங்காலில் ஏற்பட்டிருக்கும் காயத்தினால் ஜடேஜா அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள நிலையில் அதன் பிறகு சுமார் 7 மாதங்கள் வரை அவர் கிரிக்கெட் விளையாட முடியாது என தகவல்கள் கூறுகின்றன.
தற்போது 33 வயதாகும் ரவீந்திர ஜடேஜா 7 மாதத்திற்கு பின் உடற்தகுதியை நிரூபித்த பிறகு தான் அணிக்கு திரும்ப முடியும். அப்போதும் கூட டெஸ்ட் கிரிக்கெட் போன்ற பெரிய போட்டிகளில் விளையாட அவரது கால்கள் ஒத்துழைக்காது. இதன் காரணமாக தற்போதே ஜடேஜா ஓய்வை அறிவிக்கும் திட்டத்திற்கு வந்துவிட்டார் என்றும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.