திமுகவை குறிவைத்து ஐ.டி ரெய்டு - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, கட்சியில் முக்கிய புள்ளிகளை குறிவைத்து ஐ.டி.ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. பாஜக அரசுக்கு எதிரான கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களின் வீட்டில் திடீரென அடுத்தடுத்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
அண்மையில் மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரனுக்கு சொந்தமான இடங்களிலும், திமுக வேட்பாளர்கள் வீட்டிலும் திடீர் சோதனை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டிலும், மருமகன் சபரீசன் வீட்டிலும், கரூரில் செந்தில் பாலாஜி வீட்டிலும் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

திமுகவினரை குறி வைத்து பாஜக அரசு வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக திமுக பிரமுகர்கள் தற்போது கொந்தளித்துள்ளனர். இது போன்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் திமுக பயப்படாது என்றும், திமுக பூச்சாண்டித்தனத்திற்கு ஒருபோதும் அஞ்சியது கிடையாது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்டாலின் மகன் வீட்டில் ரெய்டு நடப்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் கொடுத்துள்ளார். திமுகவை அச்சுறுத்த வருமான வரித் துறையை பாஜக பயன்படுத்தி வருகிறது. அதிகாரிகளை தவறாக பயன்படுத்தக்கூடாது என பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.