அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் எ.வ.வேலு
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலையில் இவருக்கு தொடர்புடைய 100க்கும் மேற்பட்ட இடங்களில் 3வது நாளாக வருமானவரி சோதனை நடந்து வருகிறது.
அதில், அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள் மற்றும் சென்னையில் அவருக்கு தொடர்புடையவர்கள் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. விழுப்புரத்தில் அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி, மருத்துவமனையில் சோதனை நடைபெற்று வருகிறது.
தொடரும் சோதனை
மேலும் அவருக்கு தொடர்புடைய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் இல்லங்களிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே வருமானவரி சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.