பேரறிவாளன் விடுதலையும் எழுந்த புதிய சர்ச்சையும்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் புழல் ஜெயிலிலும் ரவிச்சந்திரன் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்பின் மூலம் ஜெயிலில் உள்ள மற்ற 6 பேரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வக்கீல் புகழேந்தி தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறியதாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7 பேர் விடுதலை சம்பந்தமாக தீர்மானத்தை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். இதில் தற்போது பேரறிவாளன் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநர் ஜனாதிபதிக்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ள நிலையில் வழக்கு தொடர்ந்த ஒருவரை மட்டுமே விடுதலை செய்திருப்பது சரியானது அல்ல.
பணம் இருப்பவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். ஆனால் பணம் இல்லாதவர்கள் வழக்கு தொடராமல் இருந்தால் அவர்ளுக்கு நீதி கிடைக்காது, இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்து இருக்க வேண்டும். அனைவரும் ஒரே வழக்கின் கீழ் உள்ளவர்கள்.
இதில் ஒருவருக்கு விடுதலை செய்து தீர்ப்பு அளித்துவிட்டு மற்றவர்கள் மீது பாராமுகமாக இருக்கக்கூடாது, என கூறியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்த பேரறிவாளன் இன்று விடுதலையானதற்கு அரசியல் கட்சியினர் அனைவரும் வரவேற்று வரும் நிலையில் வழக்கறிஞர் புகழேந்தியின் கருத்து சர்சையினை கிளப்பியுள்ளது.