ISRO; ஆதித்யா எல்1 விண்கலத்துடன் சூரியனை நோக்கி விண்ணில் சீறிப்பாய்ந்தது ராக்கெட்!
ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.
ஆதித்யா எல்1
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 23ம் தேதி 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ.
நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்தது இல்லை என்ற நிலையில், இந்த சரித்திர சாதனையை இந்தியா நிகழ்த்தியது. தற்போது நிலவை தொடர்ந்து, சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை வடிவமைத்தது இஸ்ரோ.
விண்ணில் ஏவப்பட்டது ராக்கெட்
இந்நிலையில் இன்று 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.