ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் - தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா மனு
isakki subhaiya plea to withdraw mla resignation: அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, கடந்த மே 26 ஆம் தேதி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து ஆளும் கட்சியான தவெகவில் இணைந்தார். இதே போல் 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.
முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழல் நிலவி வருகிறது.
இந்த 6 பேர் உட்பட 25 அதிமுக எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெகவிற்கு ஆதரவளித்தனர்.
இதனால் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரரிடம் மனு அளித்தார்.
இந்த தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ள போது அவர்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக மனு
இந்நிலையில் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்று, இடைத்தேர்தல் வழக்கு முடியும் வரை எம்எல்ஏ ஆக தொடர அனுமதி அளிக்குமாறு இசக்கி சுப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், வழக்கு நிலுவையில் உள்ளதால், எம்எல்ஏ இல்லாமல் தொகுதி மக்கள் கஷ்டப்படுவதால், இந்த மனுவை அளித்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
ஆனால், இசக்கி சுப்பையா இந்த மனுவை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ராஜினாமாவை திரும்பப் பெறும் விதி இல்லை, தொகுதி காலியானதாக அறிவிக்கப்ட்டு விட்டது இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு என சட்டப்பேரவை செயலர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.