‘சட்டத்தை மீறிய வாட்ஸ்அப்’ - ரூ.2 ஆயிரம் கோடி அபராதம் விதித்த அரசு
பிரபல சமூக வலைத்தள செயலியான வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி அபராதம் விதித்து அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகளவில் அதிகமான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் 2009 ஆம் ஆண்டு அறிமுகமாகி 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வசம் சென்றது.தற்போது 200 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வப்போது தனியுரிமையை மீறுவதாக வாட்ஸ் அப் செயலி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் வாட்ஸ் அப் செயலி தனது பயனர்களின் விவரங்களை பேஸ்புக் நிறுவனத்தின் பிற செயலிகளுடன் பகிர்ந்துகொள்வதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு ஐரோப்பிய ஒன்றிய தனியுரிமை சட்டங்களை மீறியதாக வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் இந்த அபராதம் மிகவும் குறைவாக இருப்பதாக ஐரோப்பிய ஒழுங்குமுறையாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அயர்லாந்து நாட்டின் தகவல் பாதுகாப்பு ஆணையம் (டி.பி.சி) இந்த அபராதத் தொகையை அதிகரித்துள்ளது.
அதன்படி இந்திய மதிப்பில் 1947 கோடி அபராதத்தை வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அயர்லாந்து நாடு விதித்துள்ளது.