ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அபார பந்துவீச்சு..34 ரன்கள் வித்தியாசத்தில் அணியை வீழ்த்தியது பஞ்சாப்

lose rcb ipl pbks
By Praveen Apr 30, 2021 06:50 PM GMT
Report

 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் 26-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராத் கோலி முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கே .எல்.ராகுல் - பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிறிஸ் கெயில், ராகுலுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற கேப்டன் ராகுல் மட்டும் தனிஒருவனாக களத்தில் நின்று போராடினார்.

சிறப்பாக விளையாடிய அவர் 57 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். மெக்ஸ்வெல் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்தார். ரஜத் பட்டிதர் 31 ரன்கள் எடுத்தார்.

முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.