ஐபிஎல் இறுதி போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட் : பிசிசிஐ-யின் அசத்தல் ப்ளான் இதுதான்!
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 26-ந் தேதி தொடங்கி மும்பை, புனே நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டதால், 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு மொத்தம் 70 சூப்பர் லீக் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது.
பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதி சுற்றுக்கான போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கின்றன.
அதன் படி இதுவரை மொத்தம் 67 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 3 சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், வருகிற 29-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டி துவங்கும் நேரத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது.
இதற்கு காரணம் ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது நிறைவு விழாவை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது என்பது தான்.
அதன்படி இந்தாண்டு ஐபிஎல் தொடரின் நிறைவு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி இடம்பெற உள்ளதாகவும், அதில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்பட பல பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் 75-வது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வகையிலும், இந்திய கிரிக்கெட் பயணத்தை குறிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறதாம்.
இதனால் இறுதிப்போட்டி வழக்கம் போல் இரவு 7.30 மணி இல்லாமல் 8 மணிக்கு துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கலாம் என்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, பார்வையாளர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படுவர் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.