தொகுப்பாளரால் IPL ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதா?
15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐபிஎல் 2022-ம் ஆண்டுக்கான மெகா ஏலம் இன்று தொடங்கியது.
பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தொடரில் பங்குபெறும் அணிகள் வீரர்களை பல கோடி ரூபாய் கொடுத்து போட்டிப்போட்டு வாங்கிவந்தது. ஏலம் தொடர்ந்து நடைப்பெற்று வந்த நிலையில் ,
ஐபிஎல் ஏலதாரர் ஹக் எட்மீட்ஸ் மேடையில் மயங்கி விழுந்ததால் ஐபிஎல் ஏலம் சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவுக்கான ஏலம் நடந்து கொண்டிருந்த போது ஏலதாரர் ஹக் எட்மீட்ஸ் மேடையில் மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஐபிஎல் மெகா ஏலம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.