ஐபிஎல் 2022-ல் புதிதாக சேர்க்கப்பட்ட அணிகள் நீடிக்குமா? பிசிசிஐ எடுக்கபோகும் அதிரடி நடவடிக்கை என்ன?
அடுத்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கபட்டுள்ள நிலையில் ஆட்டத்தை குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர்.
இந்த தொடருக்காக இந்தாண்டு மெகா ஏலம் நடத்தப்படவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை இன்று வெளியிடுகிறது.
புதிதாக வந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் ஏலத்தில் விடப்படும் வீரர்களில் யாரேனும் 3 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என அறிவித்ததை தொடர்ந்து லக்னோ அணி கே.எல்.ராகுல், ரஷித் கான் என முக்கிய வீரர்களிடம் தனது பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
ஆனால் அகமதாபாத் அணி மட்டும் எந்தவித முயற்சிகளும் எடுக்க முடியாத சூழலில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் அந்த அணி மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டுக்கள் தான்.
புதிய அணிகளுக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் வென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ரூ.5,625 கோடி கொடுத்து அந்த நிறுவனம் வாங்கியிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் சில சட்ட விரோத நிறுவனங்களில் சிவிசி கேப்பிடல் பார்ட்னர்ஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அகமதாபாத் அணி ஏலம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து பிசிசிஐ நிறுத்திவைத்துள்ளது.
மேலும் இந்த விவகாரத்தை விசாரிக்க ஐபிஎல் நிர்வாகத்தின் சார்பின் ஒரு குழுவை அமைக்கவும் பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் ஐபிஎல் நிர்வாக குழு கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (04.12.2021) நடைபெறுகிறது. இந்த கூட்டதின் போது அகமதாபாத் அணி விவகாரம் குறித்து விசாரணை நடத்தி முடிவு காணப்பட்டு அதில் அகமதாபாத் அணியை சிவிசி நிறுவனம் வைத்திருக்குமா என்பது முடிவாகும்.
இல்லையென்றால் வேறு நிறுவனத்திற்கு மாற்றப்படும். இந்தாண்டு ஐபிஎல்-ல் பங்கேற்க முடியாத சூழலே கூட ஏற்படலாம். இதனால் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.