மெல்ல விடைகொடு விடைகொடு மனமே..ரஷித் கானை தக்க வைக்காதது ஏன்? விளக்கம் கொடுத்த எஸ்ஆர்எச்
அடுத்தாண்டு 2022-ல் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தங்களது வீரர்களை தக்க வைத்துக் கொண்ட பெயர் பட்டியல் நேற்று வெளியானது.
இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது.
டேவிட் வார்னர், ரஷித் கான், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே போன்ற பிரபலமான வீரர்களை சன்ரைசர்ஸ் அணி இந்த முறை விடுவித்துள்ளது.
இந்நிலையில் ரஷித் கான், சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெறாதது பற்றி அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி கே. ஷம்மி, ஸ்டார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“இது மிகவும் கடினமான முடிவு. ஆனால் சம்பளத்தை முன்வைத்து ஒரு வீரர் ஏலத்தில் இடம்பெற விருப்பப்படும்போது அந்த முடிவை நாங்கள் மதிக்க வேண்டும். ஏலத்தில் சரியான தொகைக்கு ரஷித் கானைத் தேர்வு செய்ய முயற்சி செய்வோம்”என தெறிவித்தார்.