தெரிந்தே செய்த தவறு , தோனி காட்டிய அதிரடி : ரோகித் மீது சந்தேகப்படும் விமர்சகர்கள்
ரோகித் சர்மா தெரிந்தே செய்த ஒரு தவறால் தோனி கடைசி நேரத்தில் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார் என்ற சர்ச்சை வெடித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் நேற்று சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் தோனி தன்னை ஒரு ஃபினிஷராக மீண்டும் நிரூபித்ததால் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்களை குவித்தது.
இதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணியால் சரியான வேகத்தில் ரன் அடிக்க முடியவில்லை. ருதுராஜ் கெயிக்வாட் டக் அவுட், மிட்செல் சாண்ட்னர் 11, ஷிவம் தூபே 13, ஜடேஜா 3 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். உத்தப்பா 30 ரன்கள், அம்பத்தி ராயுடு 40 மட்டும் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டனர்.
இதனால் சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. உனத்கட் வீசிய இந்த ஓவரில் முதல் பந்திலேயே பிரிட்டோரியஸ் அவுட்டானார். 2வது பந்தில் டுவைன் பிராவோ சிங்கிள் அடிக்க ஸ்ட்ரைக்கிற்கு தோனி வந்தார். கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் தோனி 6, 4, 2, 4 என அடுத்தடுத்து அதிரடி காட்டி த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். வெற்றி பெற வேண்டிய போட்டியில் மும்பை மீண்டும் தோல்வியடைந்தது. இந்நிலையில் ரோகித் தெரிந்தே செய்த ஒரு தவறு தான் மும்பையை தோற்கடித்துள்ளது.
அதாவது அனுபவமில்லாத கேப்டன் கூட, தோனி ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது உனத்கட்டிற்கு பவுலிங் தரமாட்டார். இதற்கு காரணம் கடந்த காலங்களில் உள்ள ரெக்கார்ட் தான். இதற்கு முன்னரும் உனத்கட்டிற்கு எதிராக தோனி கடைசி ஓவரில் காட்டடி அடித்துள்ளார்.