IPL-22 கோப்பையை வெல்லப்போகும் அணி எது? : இறுதி ஆட்டத்தில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன!
தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் கடந்த மார்ச் 26-ந்தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது.
வழக்கம் போல் 8 அணிகள் என்றில்லாமல் இந்த வருடம் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் என பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆஃப் சுற்றுக்கான ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இந்த சுற்றுகளின் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 8 மணியளவில் நடைபெறவுள்ள நிலையில், இந்தாண்டுக்கான ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008-ம் ஆண்டு முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போதுதான் அந்த அணி இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது.
அதேபோல், நடப்பு ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் அணி முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தன் படைபல்த்தை நிரூபித்துள்ளது.
மேலும், அகமதாபாத் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி 2-வது பேட்டிங்கிற்கு முன்னுரிமை அளிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.