ஐபிஎல் தொடரில் இப்படி ஒரு அணியா? - வாயை பிளக்கும் ரசிகர்கள்
2022 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தங்களது தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், மீதமுள்ள வீரர்களை கொண்ட கனவு அணியை ரசிகர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளது. அதேசமயம் புதிய அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த வீரர்களையா வெளியேற்றிவிட்டார்கள் என பட்டியல் அமைந்துள்ளது.
தற்போது வெளியேற்றப்பட்ட வீரர்களை வைத்து ஒரு அணி உருவாக்கினால் அது எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். விடுவிக்கப்பட்ட வீரர்களில் மிகவும் முதன்மையானவர் டேவிட் வார்னர், அவர் அணியின் கேப்டனாகவும், தொடக்க வீரராகவும் கனவு அணியில் இருப்பார். அவருக்கு ஜோடியாக இந்திய வீரர் கே.எல். ராகுல் செயல்படுவார். மூன்றாவது வீரராக ராஜஸ்தான் அணி விடுவித்த பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிப்பார். நான்காவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் கனவு அணியில் இடம்பெறுவார்.
பேட்டிங் வரிசையில் 5வது வீரராக நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கனவு அணியில் இடம்பிடிப்பார். ஆறாவது வீரராக அதிரடி வீரர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா உள்ளார். 7வது வீரராக பஞ்சாப் அணி விடுவித்த ஷாரூக்கான் உள்ளார். 8வது வீரராக ஐதராபார் அணி விடுவித்த ரஷித் கானும், 9வது வீரராக இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹலும் உள்ளனர்.
10வது வீரராக கடந்த ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹர்சல் பட்டேலும், 11வது வீரராக டிரெண்ட் பவுல்டும் இருப்பார். 12வது வீரராக சென்னை அணி விடுவித்த டுபிளஸிஸ் இருப்பார்.
இப்படி பட்ட வீரர்களை புதிய அணிகளான அகமதாபாத்தோ அல்லது லக்னோ அணிகளோ தேர்வு செய்தால் அந்த அணி ஐ.பி.எல். தொடரில் கில்லி போல் செயல்படும்.. ஆனால், இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இது கனவு அணியாகவே இருக்கும்.