ஐபிஎல் தொடரில் சாதனைப் படைத்த வீரர்கள் யார், யார் தெரியுமா? - முழு விபரம் இதோ...
ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த தொடரில் எந்தெந்த வீரர்கள் சாதனைப் படைத்துள்ளார்கள் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அஹமதாபாத் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி அதிக ரன்கள் எடுத்த வீரராக ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர் (863 ரன்கள்), அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக ராஜஸ்தான் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் (27 விக்கெட்டுகள்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் அதிக பவுண்டரிகள் (128 பவுண்டரிகள்), அதிக சதம் ( 4 சதம்) ஆகிய பிரிவில் ஜோஸ் பட்லர் தேர்வானார். கொல்கத்தா அணிக்கு எதிராக லக்னோ வீரர் ஏவின் லீவிஸ் பிடித்த கேட்ச் சிறந்த கேட்ச் ஆக அங்கீகரிக்கப்பட்டது. ஐபிஎல் போட்டியில் அறத்துடன் விளையாடிய அணிக்கான விருதை ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் பகிர்ந்து கொண்டது.
மேலும் இந்த சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது பெங்களூரு வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கும், வளர்ந்து வரும் இளம் வீரருக்கான விருது ஹைதராபாத் வீரர் உம்ரான் மாலிக்கிற்கும் வழங்கப்பட்டது.