ஐபிஎல் தொடரில் புதிதாக இணையும் மேலும் 2 அணிகள் - உற்சாகத்தில் ரசிகர்கள்

Cricket IPL 2021 New Team
By Thahir Sep 15, 2021 03:27 AM GMT
Report

புதிய ஐ.பி.எல். அணிகளுக்கான ஏலம் அக்டோபர் 17-ல் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழா இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

ஐபிஎல் தொடரில் புதிதாக இணையும் மேலும் 2 அணிகள் - உற்சாகத்தில் ரசிகர்கள் | Ipl 2021 Cricket New Team

தற்போது ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதனால், ரசிகர்கள் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கின்றனர். இதனிடையே, அடுத்தாண்டுக்கான ஐபிஎல் ஏற்பாடுகள் இப்போதே தொடங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு இரண்டு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட இருக்கின்றன. இதற்கான டெண்டரை ஏற்கனவே பி.சி.சி.ஐ. வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் புதிய அணிகளுக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இந்தாண்டு இருக்கும் வீரர்கள் அடுத்தாண்டு வெவ்வேறு அணிகளுக்கு மாற்றப்படுவர். இரண்டு அணிகள் கூடுதலாக சேர்வதால், ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு பிற வீரர்களை வெளியேற்ற வேண்டும்.

அதன்பின் பொது ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். அக்டோபர் 15ஆம் தேதியுடன் ஐபிஎல் தொடர் முடிவடையும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் புதிய அணிகளுக்கான ஏலம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.