“கடுவா” திரைப்படத்திற்கு இடைக்கால தடை - படக்குழுவினர் அதிர்ச்சி
பிருத்விராஜ் நடித்துள்ள உண்மை சம்பவ கதைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழில் 'வாஞ்சிநாதன்', 'ஜனா',
'எல்லாம் அவன் செயல்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர், மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம், 'கடுவா'.
இதில் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். இந்தி நடிகர் விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், சித்திக், சீமா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம், கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போராடிய 'கடுவாகுன்னேல் குருவச்சன்' என்பவரின் உண்மைக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. குருவச்சன், ஜீப் ஒன்றின் மேல் அமர்ந்திருப்பது போலவும் போலீஸ் அதிகாரியுடன் மோதுவது போலவும் இதன் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசரும் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு எதிராக கடுவாகுன்னேல் குருவச்சன் சார்பில்,
எர்ணாகுளம் இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எனது வாழ்க்கைக் கதையை ரஞ்சித் பணிக்கர் படமாக்க இருப்பதாக சில வருடங்களுக்கு முன் சொன்னார்.
அப்படி என்றால் என் கேரக்டரில் மோகன்லால் அல்லது சுரேஷ் கோபி நடிக்க வேண்டும் , உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்தே படம் எடுக்கப்பட வேண்டும்,
முழு கதையையும் என்னிடம் காண்பிக்க வேண்டும், படத்தின் பெயர் வியக்ரம் (Vyakhram)என்று தான் இருக்க வேண்டும், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக தன்னை சித்தரிக்கக் கூடாது என்பது உட்பட சில நிபந்தனைகளோடு அதற்கு அனுமதித்தேன்.
ஆனால், இது எதுவும் இல்லாமல், என் கதையை பிருத்விராஜ் இயக்கத்தில் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். கதையை ஜினு ஆப்ரஹாம் என்பவர் எழுதியுள்ளார்.
இதன் டீசர், தனது புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இருக்கிறது. எனது கேரக்டர் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்தப் படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். விசாரித்த நீதிமன்றம் அந்தப் படத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.