ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் வெடிப்பு - 3 கடற்படை வீரர்கள் பரிதாப பலி
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பால் மூன்று கடற்படை அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மும்பை கடற்படை தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலின் உள் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று கடற்படை வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். பெரியளவில் பொருட்சேதம் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 4.30 மணியளவில் ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக கடற்படை வட்டாரத்தில் கூறுகின்றனர். கப்பலில் இருந்த ஆயுதங்கள் அல்லது குண்டுகள் ஏதும் வெடிக்கவில்லை எனவும் கடற்படை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் இந்த வெடிப்பு குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்த உடன் கப்பல் ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல்கள் 1986ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன. இந்தக் கப்பல்கள் சோவியத் யூனியன் அரசால் உருவாக்கப்பட்டவை. வான்வழி தாக்குதல், நீர்மூழ்கி தாக்குதல், ஏவுகணை தாக்குதல் ஆகியவற்றை எதிர்கொண்டு பாதுகாப்பு வழங்குவது ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல்களின் பொறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.