மைக்ரோவேவ் அவனில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2 மாத பெண் குழந்தை - தாய் கைது
பிறந்து இரண்டு மாதங்களேயான பெண் குழந்தை மைக்ரோவேவ் அவனில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சிராக் தில்லி பகுதியை சேர்ந்த குல்ஷ்ன் கௌஷிக்- டிம்பில் கௌஷிக் தம்பதியின் இரண்டாவது மகள் அனன்யா, பிறந்து 2 மாதங்களே ஆகிறது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
குல்ஷ்ன் வீட்டின் கீழ்தளத்தில் சிறிய மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் பெண் குழந்தை பிறந்ததால் தாய் டிம்பில் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி தன் கணவருடன் தகராறிலும் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று குல்ஷன் கடையில் இருந்த சமயத்தில், வீட்டின் உள்புறம் டிம்பில் தாழிட்டுள்ளார். நேரம் கடந்தும் அவர் கதவை திறக்காததால் குல்ஷனின் தாய் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.
கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு டிம்பில் சுயநினைவில்லாமல் மகனுடன் கிடந்துள்ளார். ஆனால் அவருடன் குழந்தை அனன்யா இல்லை.
வீடு முழுவதும் தேடிய நிலையில் வீட்டின் இரண்டாம் தளத்தில் வைக்கப்பட்டிருந்த மைக்ரோவேவ் அவனில் குழந்தை அனன்யா சடலமாக இருந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் செய்த முதற்கட்ட விசாரணையில் அந்த மைக்ரோவேவ் அவன் பல நாட்களாக வேலை செய்யாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
ஆனால் அதற்குள்ளே குழந்தை எப்படி சென்றது என்ற விவரம் தெரியவில்லை. மேலும் குழந்தையின் உடம்பிலும் தீக்காயம் இருப்பதற்கான அடையாளம் எதுவும் இல்லை.
இதனை தொடர்ந்து டி.சி.பி. மேரி ஜெய்கர் தலைமையிலான போலீசார் தாய் டிம்பில் மற்றும் குல்ஷனை கைது செய்து குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மறைந்துள்ள மர்மங்கள் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.