குக்கரை கல்யாணம் செய்து 4 நாட்களில் விவாகரத்து செய்த இளைஞர்
இந்தோனேசியாவில் இளைஞர் ஒருவர் குக்கரை திருமணம் செய்து 4 நாட்களில் விவாகரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பல பகுதிகளிலும் மணிக்கொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஆண்டு பிரேசில் நாட்டை சேர்ந்த இளைஞர் டியோகோ ரபேலோ என்பவர், நிச்சயம் செய்து கொண்ட பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னையே திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் கிறிஸ் கலேரா எனும் மாடல் அழகியும் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தார். அந்த வகையில் இந்தோனேசியாவை சேர்ந்த கொய்ருல் அனம் என்ற இளைஞர் அரிசி வேக வைக்கும் குக்கரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட புகைப்படத்தில் குக்கரை மணப்பெண் போல அலங்காரம் செய்தும், இவர் திருமண உடையில் நிற்பது போன்றும், திருமணத்துக்கான பதிவில் கையெழுத்திடும் போது குக்கர் அருகில் இருப்பது போன்றும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. குக்கருக்கு அவர் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார்.
மேலும் கொய்ருல் குக்கர் நான் சொல்வதை கேட்கிறது, உணவு வேக வைத்து தருகிறது, அன்பாக இருக்கிறது என்று பதிவிட்டது வைரலானது. இந்த நிலையில், குக்கரை திருமணம் செய்து 4 நாட்களில் அதனை விவாகரத்து செய்து விட்டதாக கொய்ருல் அனம் தெரிவித்துள்ளார்.
குக்கர் அரிசியை மட்டுமே வேக வைக்கிறது என்பதால் விவாகரத்து செய்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் கவனம் ஈர்ப்பதற்காகவே அவர் இவ்வாறு செய்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.