தமிழ்நாடு எப்படி வளர்ச்சியடையும்? ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்
DR TR பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியின் நான்காவது மாநில மாநாடு கடலூர் மாவட்டம் வேப்பூரில் கடந்த ஞாயிறன்று பிற்பகல் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
எழுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்ட மாநாட்டு திடலில், நூறு அடி உயர கம்பத்தில் ஐஜேகே கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார் இளையவேந்தர் Dr ரவி பச்சமுத்து.

இந்த மாநாட்டின் விளம்பரம் தயாரிப்பில் AI காட்சி உருவாக்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, மாநாட்டு திடலில் தொழில்நுட்ப பணிகளை, வேந்தர் தொலைக்காட்சியின் தலைமை இயக்க அதிகாரி மணிகண்ட பூபதி மற்றும் அவரது குழுவும் முன்னெடுத்தனர்.
தொடக்கத்திலும் இடையிடையேயும் Dr T R பாரிவேந்தர் எழுதி உருவாக்கிய பாடல்கள் AI தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டு LED திரையில் ஒளிபரப்பானது.

தமிழ்நாடு எப்படி வளர்ச்சியடையும்?- நிறுவனர் பாரிவேந்தர்
கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பேசுகையில், மக்கள் நலன் கருதியே இந்திய ஜனநாயக கட்சியை தொடங்கினோம், 15 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருகிறோம், கல்விக்காக நிறைய தொண்டுகள் செய்து வருகிறோம்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் என்னவெல்லாம் செய்தேன் என்பது மக்கள் அறிவார்கள். எங்கள் கட்சியின் நோக்கம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது தான்.
மத்திய அரசோடு எப்போதும் எதிர்ப்பு என்ற நிலை மேற்கொண்டிருந்தால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சியடையும்?
இதனால் இழப்பு தமிழ்நாட்டிற்கு தான்.
திராவிடக் கட்சிகள் வந்த பின்னர் தான் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மாணவர்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் இல்லாத நிலை தான் உருவாகியிருக்கிறது, மக்கள் இதை கவனிக்க வேண்டும்.
இப்படியே இது தொடருமானால் இளைஞர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்? வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என பேசினார்.

தொண்டர்களின் கூட்டம் ஆட்சி மாற்றத்தை உறுதிப்படுத்துகிறது - நயினார் நாகேந்திரன் பேச்சு
எஸ்.ஆர்.எம் நிறுவனத்தில் மட்டும் 5,000 மாணவர்களுக்கும் மேல் இலவசமாக படிப்பதற்கு உதவி செய்கிறார். மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு இலவச சிகிச்சை அளித்து உதவுகிறார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லெண்ணத்தை பெற்றவர். அதனாலேயே பிரதமர் மோடி சென்னைக்கு வரும்போதெல்லாம் ஐயா பாரிவேந்தர் எப்படி இருக்கிறார் என்று நலம் விசாரிக்கிறார்.
உலகத்தின் மிகப்பெரிய தலைவரான நரேந்திர மோடி அவர்களின் கரத்தைப்பற்றி, தமிழ் மண்ணிலும் அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், இந்த மாநாட்டில் அலை கடலென திரண்டிருக்கும் தொண்டர்களின் கூட்டமும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு வெற்றி கூட்டணி
இந்த மாநாட்டிற்கு பெருமளவில் பெண்கள் வந்திருக்கிறார்கள். அது ஒரு நல்ல விஷயம். ஒரு பெண் முன்னேறினால் அந்த குடும்பமே முன்னேறும்.
பெண்கள் அரசியலில் ஆர்வமுடன் கலந்துகொள்வது வரவேற்கத்தக்கது. ஆண்கள் அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல் இருந்தாலே போதும் என்று தெரிவித்தார் ஐ.ஜே.கே தலைவர் ரவி பச்சமுத்து.
ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வர்த்தகக் கொள்கையை எத்தனை பேர் மிரட்டினாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து வருகிறார்.
உலகம் முழுவதும் எக்கனாமிக்கல் வார், பயோ வார் என்று உலகப் போருக்கான பதட்டமான சூழல் நிலவிவரும் வேளையில் நாம் பிரதமர் மோடியின் கரங்களை இறுகப்பற்றி அவருக்கு வலு சேர்க்க வேண்டும்.

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை மோடி எவ்வளவு சிறப்பாக திட்டமிட்டு எவ்வளவு விரைவாக நடத்தி முடித்துக் காண்பித்தார் என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னார்.
பிரதமர் மோடியை போலவே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்களும் மக்களுக்கும் நாட்டுக்கும் சிறப்பான பங்காற்றி இருப்பதாக தெரிவித்த அவர், 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்ததே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தான் என்று தெரிவித்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. மக்கள் விரோத ஊழல் மலிந்த ஆட்சியை நடத்துகின்ற திமுக அரசுக்கு கண்டனம்
2. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, இபிஎஸ் தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.
3. சாதி சமய மத அடிப்படையில் வேற்றுமைகள் வளர்வதை தடுக்க சிறுபான்மையினர் என்று பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் ”மைனாரிட்டி” என்ற சொல்லை நீக்க தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
4. கல்வி வேலைவாய்ப்புக்கு அளிக்கப்படும் முன்னுரிமையான இட ஒதுக்கீடு, ஜாதி மத அடிப்படையில் அல்லாமல் பொருளாதார அடிப்படையில் அளிக்கப்பட வேண்டும்.
5. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

6. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
7. கச்சத்தீவை மத்திய அரசு உடனே மீட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும்.
8. வன்கொடுமை தடுப்பு சட்டமான பிசிஆர் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
9. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் PM SHRI பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைக்கப்பட வேண்டும்.
10. போராடிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மாநில அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11. ஒவ்வொரு ஒன்றியத்திலும் நெல் கொள்முதல் செய்ய, மூடப்பட்ட கிடங்குகளை உடனடியாக திறக்க வேண்டும்.
டாஸ்மாக் மூடப்பட வேண்டும், பெண்களுக்கு சம உரிமை வேண்டும், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஐஜேகேவின் கொள்கைகளை மாநாட்டின் உறுதி மொழிகளாக பாரிவேந்தர் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan