இங்கிலாந்தில் மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இந்திய மாணவருக்கு சிறை
இங்கிலாந்தில் மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இந்திய மாணவருக்கு சிறையிலடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் ஹெட்டிங்டனில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு புரூக்ஸ் பல்கலைகழகத்தில் சஹீல் பாவ்நானி என்ற இந்திய மாணவர் பயின்று வருகிறார். இவர் அதே பல்கலைகழகத்தில் பயின்று வரும் 26 வயதான நர்சிங் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
அதன் விளைவாக மாணவியை அந்த மாணவர் பின் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அந்த மாணவியை கடத்திக் கொண்டு போய்விடுவதாகவும் அச்சுறுத்தல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சஹீல் நர்சிங் மாணவியை அச்சுறுத்தும் விதத்தில் நூறு பக்க கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் ஆன்லைனில் இருந்து எடுக்கப்பட்ட அச்சுறுத்தும் விதமான வார்த்தைகளை உபயோகித்தும் உள்ளார்.
மேலும் அவர் மாணவிக்கு அனுப்பிய 6 நிமிட வாய்ஸ் மெசேஜில் கூறியிருப்பதாவது, “உன்னை என் மனைவியாக்கி கொள்ளப் போகிறேன், என்னுடைய குழந்தைகள் உன் மூலமாக பிறக்கும், உன்னை என்னுடன் வாழ வைப்பேன்” என்று அதில் கூறியுள்ளார்.
மிகவும் பயந்து போன மாணவி தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே தனியாகச் செல்லாமல் இருந்துள்ளார். தொடர்ந்து மாணவர் அளித்து வந்த கடும் வற்புறுத்தலுக்கு மறுப்பு தெரிவித்த மாணவி, மீண்டும் மீண்டும் தொல்லை தந்தால் போலீசில் புகார் அளிப்பேன் என்றும் எச்சரித்தும் உள்ளார்.
இந்த விஷயங்களை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள அந்த மாணவி சஹீல் பாவ்நானி தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார் என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார். இறுதியில் அந்த மாணவர் மீது புகார் கொடுக்கப்பட்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு வந்தது.
வழக்கினை விசாரித்த ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்ற நீதிபதி நைகல் டேலி, அந்த மாணவருக்கு 4 மாத சிறைத்தண்டனையும், 2 வருடங்கள் சஸ்பெண்ட் செய்தும் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், அந்த மாணவர் பாதிக்கப்பட்ட மாணவியை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள 5 ஆண்டுகள் தடை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னதாக, அவர் ஜாமீனை மீறிய குற்றத்திற்காக 1 மாதம் சிறை காவலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.