தமிழகத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தொடக்கமும், முக்கிய தலைவர்களும்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆரம்பமும் அதன் முக்கிய தலைவர்கள் குறித்த விவரங்களை சற்று விரிவாக பார்க்கலாம்.
கட்சியின் வரலாறு
இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் என்பவர் அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தோற்றுவித்தார்.
பின்னர் கட்சியை முகமது அலி ஜின்னா, வழி நடத்தினார் அதன் பின் அக்கட்சியின் தலைவராக காயிதே மில்லத் வழி நடத்தினார்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் இந்தியாவில் தங்கிவிட்டனர்.
இதையடுத்து 1949 ஆம் ஆண்டு கட்சியின் பெயரின் முன்பு இருந்த “அகில” என்ற வார்த்தையை நீக்கினார். பின்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று மாற்றினார் காயிதே மில்லத்.
அதன் பின்னர் கட்சியின் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் இணையத் தொடங்கினர்.
தொடர்ந்து தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் அதிகமான இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது.
யார் இந்த முகம்மது அலி ஜின்னா?
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தொடக்கத்தில் நவாப் சலீம் முல்லாகான் என்பவருக்கு அடுத்து வழி நடத்தியவர் முகம்மது அலி ஜின்னா.
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் தலைவராக இருந்த முகம்மது அலி ஜின்னா இந்தியா - பாகிஸ்தான் பிரிந்ததற்கு பின் பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்பட்டு வந்தார்.
இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனால் இந்தியாவில் அக்கட்சியை வழிநடத்தும் பொறுப்பை முகம்மது இஸ்மாயில் என்ற காயிதே மில்லத்திடம் வழங்கப்பட்டது.
காயிதே மில்லத் யார்?
திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் பிறந்தவர் முகம்மது இஸ்மாயில். இவரது தந்தை திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராக இருந்து வந்தார்.
சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தார் முகம்மது இஸ்மாயில் என்ற காயிதே மில்லத். தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார்.
பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
அரசியலில் மதிப்புமிக்க தலைவர்
அனைத்து கட்சியினருக்கும் மத்தியில் மதிப்பு மிக்க தலைவராக திகழ்ந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, லால்பகதுார் சாஸ்திரி, ஜாகீர் உசேன், பெரியார், ராஜாஜி காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஆகிய தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்தார்.
1945-ம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லீம் கட்சியின் தலைவர்.
1948-ம் ஆண்டு இந்திய யூனியன் லீக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1967இல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.
1946 முதல் 1972 வரை சென்னை மாநில இறைச்சி விற்பனையாளர்கள் சங்க தலைவராக இருந்தார்.
காயிதே மில்லத் மறைவு
முகம்மது இஸ்மாயில் என்ற காயிதே மில்லத் கடந்த 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு குடல் புண் நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 நள்ளிரவு அவர் காலமானார். பின்னர் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லுாரியில் வைக்கப்பட்டது.
அவரின் உடலுக்கு அப்போதைய திராவிட கழக தலைவர் தந்தை பெரியார், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரின் உடல் திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா மசூதியில் அடக்கம் செய்யப்பட்டது.
மணி மண்டபம்
2003 ஆம் ஆண்டு தமிழக அரசு அவரின் நினைவாக ஒரு மணி மண்டபத்தை கட்டியது. மேலும் அவரின் நினைவாக கல்லுாரிகளுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.
குறிப்பாக காயிதே மில்லத் அரசினர் பெண்கள் கல்லுாரி, சென்னை மற்றும் காயிதே மில்லத் கலைக் கல்லுாரி என பெயர் சூட்டப்பட்டது.
தற்போதைய தலைவர் யார்?
தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவராக போராசிரியர் காதர் மொய்தீன் இருந்து வருகிறார்.
இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லுார் என்ற கிராமத்தில் 1940 ஆம் ஜனவரி 5 ஆம் தேதி பிறந்தார். காதர் மொய்தீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில தலைவராகவும், தேசிய பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
ஜமால் முகம்மது கல்லுாரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். இவர் கலைஞரின் நெருக்கிய நண்பராக இருந்து வந்தார்.
தற்போது தமிழக முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கும் நெருக்கமானவராக இருந்து வருகிறார். கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலுார் மக்களவைத் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வாழும் நெறி, குர்ஆனின் குரல், இஸ்லாமிய இறைக்கோட்பாடு உள்பட 6 நுால்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.