சீன பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவன் படுகொலை - அதிர வைக்கும் பின்னணி
சீனாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வெளிநாட்டு மாணவர் ஒருவரைக் சீன போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் சீனாவில் தங்கள் கல்லூரி படிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா காரணமாக பெரும்பாலானோர் கடந்தாண்டு இறுதியில் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த சில மாணவர்கள் மட்டும் தொடர்ந்து அங்கு தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தியான்ஜின் வெளிநாட்டு ஆய்வு பல்கலைக்கழகத்தில் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர் கடந்த வாரம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட மாணவர் பீகார் மாநிலத்தின் கயா பகுதியைச் சேர்ந்த அமன் நாக்சென் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
அதேசமயம் கூர்மையான ஆயுதம் கொண்டு இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற பாணியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் மற்றொரு வெளிநாட்டு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் கொலைக்கான காரணம் குறித்து அம்மாணவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.