எல்லையை கடக்க முயலும் இந்திய மாணவர்களை தடுத்து தாக்கும் உக்ரேனியர்கள் : அதிர்ச்சி வீடியோ
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டில் அமைதி சீர்குலைந்து, மக்கள் உயிர் பிழைக்க அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனில் சிக்கித்தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க அண்டை நாடுகள் உதவியுடன் ‘ஆபரேசன் கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் இந்திய அரசால் மீட்புப் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளது.
அந்த வகையில், ருமேனியா தலைநகர், புகாரெஸ்ட் விமான நிலையத்திலிருந்து 249 இந்தியர்களுடன் 5-வது சிறப்பு விமானம் இன்று அதிகாலை டெல்லி புறப்பட்டது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கிதவிக்கும் எஞ்சிய இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளுக்கு சென்றடைய எல்லை நோக்கி செல்லும்போது தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதாக அறிவித்திருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் இந்திய மாணவர்களை அவமதித்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்டை நாடான போலந்து நாட்டு எல்லையில் உக்ரைன் போலீசார் இந்திய மாணவர்களை தாக்குவதாகவும், எல்லையை கடக்கவிடாமல் மறுப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து மான்சி சவுத்ரி என்ற மாணவி கூறும்போது,
‘இங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிறது. இந்திய மாணவர்களை சித்ரவதை செய்கிறார்கள். எங்களை போலந்து எல்லையை கடக்க அனுமதிக்கவில்லை.
மாணவிகளை கூட துன்புறுத்துகிறார்கள். அவர்களின் தலைமுடியை பிடித்து இழுக்கிறார்கள். கம்பியாலும் தாக்கினர். இதில் சில மாணவர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்திய தூதராக அதிகாரிகள் எங்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் போன்ற உதவிகளை செய்கிறார்கள். ஆனால் எல்லை காவலர்கள் எங்களை கடக்க விடுவதில்லை.
எல்லையை யாராவது கடக்க முயன்றால் கம்பிகளால் தாக்குகிறார்கள். முகத்தில் குத்துகிறார்கள். துப்பாக்கி சூடும் நடத்தினர். நான் எல்லையை கடக்க 3 நாட்களாக காத்திருந்தேன்.
நாங்கள் விலங்குகளை போல சித்ரவதை செய்யப்பட்டோம். அவர்களது மக்களை (உக்ரைன் நாட்டவர்) கடக்க அனுமதிக்கிறார்கள். எங்களை எல்லையை கடக்க அனுமதிக்கவில்லை’ என்றார்.
இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி,
My heart goes out to the Indian students suffering such violence and their family watching these videos. No parent should go through this.
— Rahul Gandhi (@RahulGandhi) February 28, 2022
GOI must urgently share the detailed evacuation plan with those stranded as well as their families.
We can’t abandon our own people. pic.twitter.com/MVzOPWIm8D
“இதுபோன்ற வன்முறைகளால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களுக்காகவும், இந்த வீடியோ பதிவை பார்க்கும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் என் மனம் குமுறுகிறது. எந்த பெற்றோரும் இதுபோன்ற வலியை அனுபவிக்ககூடாது.
இந்திய அரசு உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிப்பவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடன் மாணவர்களை வெளியேற்றும் விரிவான திட்டத்தை உடனடியாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நம் சொந்த மக்களை நாம் கைவிட முடியாது.” என பதிவிட்டுள்ளார்.