உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடல் மருத்துவ படிப்புக்கு தானம்
நேட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 24-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்ய படைகளை தனியாளாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ரஷ்ய படையினர் கார்கிவ் நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாணவரின் பெற்றோரை தொடர்பு கொண்டு மாணவரின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்தனர்.
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவரின் உடலை மீட்டு தாயகம் கொண்டுவரக்கோரி நவீனின் பெற்றோர் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி, உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாணவர் நவீனின் உடல் வருகிற திங்கட்கிழமை அதிகாலையில் கர்நாடக விமான நிலையம் வந்தடையும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.
மரணமடைந்த மாணவர் நவீனின் தந்தை சங்கரப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“உக்ரைனில் குண்டுவீச்சில் உயிரிழந்த நவீனின் உடல் வருகிற 21-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் பெங்களூருவுக்கு வந்து சேரும். அதன்பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்படும்.
நவீனின் உடலை மருத்துவம் படிக்க கூடிய மாணவ மாணவிகளுக்காக தேவநகரியில் உள்ள எஸ்.எஸ். மருத்துவமனைக்கு தானமளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.