மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா; இந்திய பெண் சமையல் கலைஞருக்கு அழைப்பு - என்ன காரணம்?
மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இந்திய பெண் சமையல் கலைஞருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முடிசூட்டு விழா
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இந்நிலையில், அவரது அதிகாரபூர்வ முடிசூட்டு விழா, மே 6-ந்தேதி நடைபெற உள்ளது.

உலகம் முழுவதுமுள்ள சுமார் 2,000 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் சமையல்கலைஞர் மஞ்சு மாலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மஞ்சு மாலி
சிறப்பான தொண்டு பணிகளுக்காக வழங்கப்படும் பிரிட்டிஷ் பேரரசு பதக்கத்தை பெற்றவர் என்கிற முறையில் மஞ்சு மாலிக்கு இந்த கெளரவம் அளிக்கப்படுகிறது. மேலும், பிரிட்டிஷ் பேரரசு பதக்கத்தை பெற்ற 800-க்கும் அதிகமான தன்னர்வலர்கள் முடிசூட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

மஞ்சு மாலி ஒரு தொழில்முறை சமையல்காரர் ஆவார். அவர் 2016-ஆம் ஆண்டு முதல், Open Age தொண்டு நிறுவனத்தில் ரெசிடென்ட் செஃப் ஆக செயல்பட்டார். இது 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் புதிய ஆர்வங்களை உருவாக்கி கொடுத்து, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.