ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் : இந்தியா யார் பக்கம்..? - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மக்களவையில் பதில்
உக்ரைன் நாட்டு மீது ரஷ்யா 42-வது நாளாக கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்கள் பேரழிவை சந்துத்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையே நடந்து வரும் இந்த கடுமையான போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

ஐ.நா உள்பட பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் ரஷ்யாவின் இத்தகைய போக்கிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உக்ரைனுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்த போரை நிறுத்தவேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்திய போதிலும் எதற்கும் செவி சாய்க்காத ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி தான் வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தபோதிலும் இந்தியா மௌனத்தையே கடைப்பிடித்து நடுநிலை வகித்து வருகிறது.
உக்ரைன் ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நேற்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இன்று பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
“உக்ரைனில் இருந்து பெரிய அளவில் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதுவரை யாரும் இவ்வளவு பெரிய அளவில் குடிமக்களை வெளியேற்றியதில்லை. இது இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் சவாலான நடவடிக்கை.
இது மற்ற நாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு அதே அளவிலான ஒத்துழைப்பு கிடைத்திருக்காது.
பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் இந்த வெளியேற்றத்தில் அக்கறை செலுத்தினார். இந்த விவகாரத்தில் இந்தியா எந்தப் பக்கம் நிற்கிறது எனக் கேட்டால், அமைதியின் பக்கம் நிற்கிறது என்றே சொல்ல வேண்டும். வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றே இந்தியா வலியுறுத்துகிறது.
இதுதான் கொள்கை அடிப்படையிலான நமது நிலைப்பாடு. இதுதான் ஐநா உள்ளிட்ட சர்வதேச விவாதங்களில் நமது நிலைப்பாட்டைத் தொடர்ந்து வழி நடத்தி வருகிறது.
புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் சம்பவம் குறித்து சுயாதீனமான விசாரணை நடைபெற எழுந்திருக்கும் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கிறது.
உக்ரைன் நிலைமைக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் பூசுவது துரதிர்ஷ்டவசமானது. இரு தரப்புக்கும் இடையிலான பகை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்தியா வந்திருந்த ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவிடமும் இதுவே வலியுறுத்தப்பட்டது” என தெரிவித்தார்.