"கார்கீவ் நகரைவிட்டு இன்று மாலை 6 மணிக்குள் எப்படியாவது வெளியேறுங்கள்" - இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைன் நாட்டின் கர்சன் நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளும் கருங்கடலை ஒட்டி முக்கியமான துறைமுகங்களும் அமைந்துள்ள முக்கியமான நகரமாகும்.
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கார்கிவ் நகரிலுள்ள காவல்துறை அலுவலம் தீயிற்கு இரையானது.
உக்ரைனுடன் 2-கட்ட பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள போதிலும் ரஷ்யா தனது ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிலையில், கார்கீவ் நகரைவிட்டு உடனடியாக இன்று மாலை 6 மணிக்குள் எப்படியாவது வெளியேறுங்கள் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.