“இந்த பையனோட ஆட்டத்தை பார்க்கவே அதிரடியா இருக்கும்” - இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா கருத்து
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த இஷான் கிஷனை, ரோகித் சர்மா பாராட்டி பேசியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.
லக்னோ மைதானத்தில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் அடித்து குவித்தது.
அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 89 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத ஸ்ரேயஸ் ஐயர் 57 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இலங்கை அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான பதும் நிஷான்கா முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
இதில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் தன்னந்தனியாக போராடிய சாரித் அஸ்லன்கா 53 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
சாரித் அஸ்லன்கா தனியாக போராடினாலும், மற்ற வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், இலங்கை அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷனை பாராட்டு பேசியுள்ளார்.
“இஷான் கிஷனை எனக்கு நீண்ட காலமாக தெரியும். ஒவ்வொரு போட்டியிலும் அவரது எண்ண ஓட்டம் எப்படி இருக்கும் என்பதும் எனக்கு தெரியும், அதே போல் அவரால் என்ன முடியும் என்பதும் நான் நன்கு அறிவேன்.
இஷான் கிஷனின் அதிரடி ஆட்டத்தை வேடிக்கை பார்ப்பதே மிக அழகானது. இந்த போட்டியிலும் இஷான் கிஷன் மிக சிறப்பாக விளையாடினார்.
ஜடேஜா மீண்டும் அணியில் இடம்பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஜடேஜாவின் பேட்டிங் வரிசையை மாற்ற திட்டமிட்டுள்ளோம், அவரை முன்வரிசையில் களமிறக்குவதே எங்களது தற்போதைய திட்டம்.
ஜடேஜா தற்போது மிகசிறந்த பேட்ஸ்மேனாக உள்ளதால், அவரது பேட்டிங் திறமையை சரியாக பயன்படுத்தி கொள்ளவதே இந்திய அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பெரிய ஆடுகளங்களில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும், ஏனெனில் பெரிய ஆடுகளங்களில் தான் நமது பேட்டிங் திறமையை பரிசோதித்து கொள்ள முடியும்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், இலகுவான சில கேட்ச்களை தவறவிட்டது ஏமாற்றம் அளிக்கிறது.
பீல்டிங் பயிற்சியாளர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். டி.20 உலகக்கோப்பைக்கு முன்னதாக பீல்டிங்கில் முழு பலம் பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.