இந்தியன் 2 படப்பிரச்சனை பேசி தீர்க்க முடியவில்லை: இயக்குனர் சங்கர் தகவல்
இந்தியன் 2 பட தயாரிப்பு விவகாரம் தொடர்பாக இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சு தோல்வியடைந்து விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் - 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண அறிவுறுத்தியது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில் இயக்குனர் சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமை இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும்.
இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஏற்கவில்லை எனவும், தயாரிப்பு நிறுவனம் ஜூன் மாதத்தில் படத்தை முடிக்க வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டதால் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இயக்குனர் சங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.