ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்தப் பெண்!
தென் ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றிடுத்து பெண் ஒருவர் உலக சாதனை படைத்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர் டெபோஹோ சோடெட்சி. இவருடைய மனைவி கோசியாம் சித்தோல் (37). கோசியாம் கர்ப்பமுற்றிருந்தார். இவருக்கு நேற்று பிரசவ வலி வந்தது.
இதனையடுத்து, பிரிட்டோரியா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் கோசியாம் பிரசவத்திற்காக அவரது கணவர் அனுமதித்தார். பிரசவத்தில் கோசியாமிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் 7 ஆண் பிள்ளைகளும், 3 பெண் பிள்ளைகளும் பிறந்தது.
இது குறித்து கணவர் டெபோஹோ பேசுகையில், தொடக்கத்தில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன் என நினைக்கிறேன். என்னால் அதிகம் பேச முடியவில்லை என்று ஆனந்த கண்ணீர் வடித்தார்.
இது குறித்து தாய் கோசியாம் கூறுகையில், இயற்கையான கர்ப்பம் இது. கருவுறுதல் சிகிச்சை எதுவும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கமான மருத்துவ சோதனையின் போது 6 குழந்தைக்கு தாயாக போகிறாய் என்று மருத்துவர்கள் பரிசோதித்து சொன்னார்கள். அதன் பின்னர் நடந்த சோதனையில் 8 குழந்தைக்கு தாயாக போகிறீர்கள் என்று தெரிவித்தார்கள். மருத்துவர்களின் பேச்சை நம்ப முடியாமல் இருந்தேன். தற்போது எனக்கு 10 குழந்தைகள் பிறந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன்.
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது, கோசியாம் சித்தோல் 10 பிள்ளைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.