பாகிஸ்தான் வான்வெளியில் பறந்த பிரதமர் மோடியின் சிறப்பு விமானம்
ஜி 20' மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் பயணம் செய்தார். அப்போது, பாகிஸ்தான் வான்வெளி வழியாக அந்த சிறப்பு விமானம் சென்றது.
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமரின் தனி விமானம் பறந்துச் செல்ல, பாக். அரசிடம், நம் வெளியுறவு அமைச்சகம் அனுமதி கோரியது. ஆனால், பாகிஸ்தான் அரசு அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டது.
இதனையடுத்து, டில்லியிலிருந்து மாற்று வழியாக அமெரிக்காவுக்கு சென்றார் பிரதமர் மோடி. இந்நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த 'ஜி 20' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். தங்கள் வான்வெளி வழியாக பிரதமர் மோடியின் விமானம் செல்ல, பாகிஸ்தான் அரசு அனுமதி கொடுத்தது. இதனையடுத்து, பாக்., வான்வெளி வழியாக பிரதமரின் விமானம் இத்தாலி சென்றடைந்தது.
