பசியால் வாடும் நாடுகளின் பட்டியல் வெளியீடு - 101வது இடத்தை பிடித்த இந்தியா
உலகில் பசியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒரே ஆண்டில் 94வது இடத்திலிருந்து 101வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள 116 நாடுகளிலும் உலகில் பசியால் வாடுபவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட 4 அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 94-வது இடத்தில் இந்தியா இருந்தது.
ஆனால், தற்போது 101வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. அண்டை நாடான நேபாளம், வங்கதேசம் 76-வது இடத்திலும், பாகிஸ்தான் 92-வது இடத்திலும் இருக்கிறது.
இந்தியாவிற்கு பின்னால் 102-வது இடத்தில் பப்புவா நியூகினியா, ஆப்கானிஸ்தான், 103-வது இடத்தில் நைஜீரியாவும், 105-வது இடத்தில் காங்கோ ஆகிய சிறிய நாடுகள் மட்டுமே இருக்கின்றன.
கடைசி இடமான 116-வது இடத்தில் சோமாலியா இருக்கிறது. இதேபோல், பட்டினி மிகவும் கொடூரமாக உள்ள 31 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றிருக்கிறது. கொரோனா பரவலால் கடந்த ஒரே ஆண்டில் கோடிக்கணக்கான இந்தியர்கள் வறுமையின் பிடியில் சிக்க வைத்திருப்பது இந்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்திருக்கிறது. பட்டினியை ஒழித்த முதல் 10 நாடுகளில் பிரேசில், சிலி, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன.