இலங்கை அதிபர் மற்றும் பிரதமருடன் இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே சந்திப்பு
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்சவை இந்திய ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே 4 நாள் பயணமாக இலங்கைச் சென்றிருக்கிறார்.
அங்கு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபட்சவை நேற்று அவர் சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா, இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த கோத்தபய ராஜபட்சவின் வழிக்காட்டுதலை அவர் கோரினார்.
பிராந்தியத்தின் பாதுகாப்பு கருதி இருநாடுகளிலும் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் இலங்கை ராணுவ வீரர்கள் சுமார் 1,000 பேர் பயிற்சி பெறும் நிலையில், அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் 50 பேருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபட்சவை அவரின் இல்லத்தில் எம்.எம்.நரவணே சந்தித்தார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இருவரும் வலியுறுத்தி பேசினார்கள்.
இருநாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நிலவும் உறவை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தார்கள். இலங்கைக்கு பல்லாண்டுகளாக இந்திய பாதுகாப்புப் படைகள் அளித்து வரும் உதவிக்கு, குறிப்பாக பயிற்சி சார்ந்த உதவிக்கு மகிந்த ராஜபட்ச பாராட்டு தெரிவித்தார்.
அந்நாட்டு வெளியுறவு செயலர் ஜெயநாத் கொலம்பகே, பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன, முப்படை தளபதி சவேந்திர சில்வா ஆகியோரையும் சந்தித்த நரவணே, இருதரப்பு பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அந்நாட்டில் உள்ள இந்திய அமைதிப்படையின் போர் நினைவிடத்துக்கு எம்.எம்.நரவணே சென்றார். அங்கு இலங்கை உள்நாட்டுப் போரின்போது உயிர் நீந்த இந்திய வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் புதன்கிழமை சந்தித்தார். அப்போது இந்தியா, இலங்கை இடையே வலுவான நட்புறவு நிலவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபட்சவை அவரின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்த அவர், அங்கு நடைபெற்ற நவராத்திரி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
