அதிரடி காட்டிய இந்தியா அணி....மிரண்டு போன நியூசிலாந்து - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ரன் எடுக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், கிளன் பிலிப்ஸ் (36), பிரேஸ்வெல் (22) மற்றும் சாட்னர் (27) ஆகிய மூன்று வீரர்களை தவிர மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால், 34.3 ஓவரில் வெறும் 108 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் ஹர்திக் பாண்டியா மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா அபார வெற்றி
இதன்பின் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா 51 ரன்களும், சுப்மன் கில் 40* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20.1 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.