இங்கிலாந்தை வீழ்த்தி அதிரடி காட்டிய இந்திய அணி - 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இங்கிலாந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ 49, மொயீன் அலி 43, லிவிங்ஸ்டன் 30 ரன்கள் விளாச 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 189 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல், இஷான் கிஷன் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இஷான் கிஷன் 70 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார். கே.எல்.ராகுல் 51 ரன்கள் குவித்தார்.
இறுதியில் இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் 29 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.