2 சூப்பர் ஓவர் - பயம் காட்டிய ஆப்கானிஸ்தான் - இந்தியா த்ரில் வெற்றி ..!
கடைசி டி20 போட்டியில் இந்தியா அணி 2-வது சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
3-வது டி20
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் படி கேப்டன் ரோகித் சர்மா கடைசி வரை அவுட்டாகாமல் 121 ரன்களை குவித்தார்.
மறுமுனையில் ரிங்கு சிங் 69 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். இறுதியில் இந்தியா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது.
பின்னர் களமிறங்கிய ஆப்கனிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 50 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 50 ரன்களும் எடுத்தனர். கடைசியாக குல்பதீன் நைப் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் சூப்பர் ஓவர்
இதனால் வெற்றியை முடிவு செய்ய சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில், குல்பதீன் நைப் மற்றும் முகமது நபி களமிறங்க, முகேஷ் குமார் பந்து வீசினார்.
முதல் பந்திலேயே குல்பதீன் நைப் ஆட்டமிழந்தார். அடுத்து ரஹ்மானுல்லா குர்பாஸ் களமிறங்கி 4, 1 ரன்கள் எடுக்க, நபி 1, 6, 1 + 2 என்று எடுக்க 15 ரன்களை ஆப்கனிஸ்தான் அணி எடுத்தது. 16 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர்.
முதல் 2 பந்துகளில் 2 ரன்களும், அடுத்த 2 பந்துகளில் ரோகித் சர்மா 2 சிக்ஸர்கள் பறக்க அடித்து அசத்த, 5ஆவது பந்தில் ரோகித் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற நிலையில், ரோகித் சர்மா ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். ரிங்கு சிங் களமிறங்க, கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முதல் சூப்பர் ஓவர் டை ஆனது.
2-வது சூப்பர் ஓவர்
இதனால் 2-வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் களமிறங்க, ரோகித் சர்மா 6, 4, 1 என ரன்கள் எடுக்க, ரிங்கு சிங் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் அடுத்து வர, 5 ஆவது பந்தில் ரோகித் சர்மா ரன் அவுட்டானார். இதன் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு 12 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இம்முறை ரவி பிஷ்னாய் பந்து வீசினார். முகமது நபி மற்றும் கரீம் ஜனத் களமிறங்கினர். முதல் பந்தில் நபி ஆட்டமிழக்க அடுத்து வந்த குர்பாஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2ஆவது சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.