“வெளிநாட்டிற்கு போனாலே இப்படி தான்”.. இந்திய அணி மீது விராட் கோலி வைத்த முக்கிய குற்றச்சாட்டு என்ன?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கான முக்கிய காரணங்களை விராட் கோலி வெளிப்படையாக உடைத்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 223 ரன்களை சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணி 13 ரன்கள் பின் தங்கி 210 ரன்கள் சேர்த்தது.
2வது இன்னிங்ஸிலாவது இந்திய அணி அதிக ரன்களை குவித்து நல்ல இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏமாற்றமே காத்திருந்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவருமே ஏமாற்றியதால் வெறும் 198 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் ரிஷப் பண்ட் 100 ரன்கள் விளாச மற்ற அனைவரும் அடித்த ரன்கள் 98 ஆகும்.
எளிய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தியது. தொடக்க வீரர் எய்டன் மர்க்ரம் 16 ரன்களுக்கு வெளியேறிய போதும், கேப்டன் டீன் எல்கர், கீகன் பீட்டர்சன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பீட்டர்சன் 82 ரன்கள் குவிக்க அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியது.
இதன் மூலம் இந்திய அணியால் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை என்ற வரலாறு நீடிக்கிறது.
இந்நிலையில் போட்டிக்கான காரணம் குறித்து விராட் கோலி பேசியுள்ளார். அதில், அயல்நாடுகளுக்கு செல்லும் போது இந்திய அணியின் முக்கிய பிரச்சினையாக நிலையில்லாத தன்மை இருக்கிறது.
ஒருபோட்டியில் வென்றவுடன் அந்த நம்பிக்கையை அடுத்த போட்டிக்கு கொண்டு செல்ல தவறுகிறோம். வெற்றியை நீடித்து தொடரை கைப்பற்ற வேண்டும். இந்த போட்டியின் முக்கிய இடங்களில் நாங்கள் கவனம் சிதறியதும் ( டீன் எல்கர் ரிவ்யூவ்) தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
பேட்டிங்கில் பெரும் சொதப்பல் இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். அதற்கு மன்னிக்க முடியாத ஒன்று. பேட்டிங்கில் நிலையான தன்மை இல்லாமல் 40 - 50 ரன்களுக்குள் பல விக்கெட்டை இழக்கிறோம்.
அதனை அடுத்த தொடருக்குள் நிச்சயம் சரி செய்வோம். ஓப்பனராக கே.எல்.ராகுலின் செயல்பாடு, மயங்க் அகர்வாலின் வளர்ச்சி மற்றும் ரிஷப் பண்ட்-ன் நம்பிக்கையான ஆட்டம் தான் நாங்கள் எடுத்துக்கொண்டு செல்லப்போகும் நல்ல விஷயங்களாக பார்க்கிறோம் என விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.