செஞ்சுரியன் போட்டியில் புஜாரா இரண்டாவது கோல்டன் டக் ; ராகுல் - அகர்வால் அரைசதம் எடுத்து சாதனை
தென்னப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விரைவாக 2 விக்கெட்களை இழந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று செஞ்சுரியன் மைதானத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷர்துல் தாகூர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இருவரும் தென்னாப்பிரிக்க அணியின் முதல் 15 ஓவர்களை சிறப்பாக சமாளித்து அடினர். உணவு இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்தது.
உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது இருவரும் நிதான ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். சிறப்பாக ஆடிய மாயங்க் அகர்வால் அரைசதம் கடந்து அசத்தினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இவர் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின்னர் தற்போது மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
மேலும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் அடித்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையை ராகுல்-மயங்க் அகர்வால் ஜோடி பெற்றுள்ளது.
மயங்க் அகர்வால் 60 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
செஞ்சுரியன் மைதானத்தில் புஜாராவின் இரண்டாவது கோல்டன் டக் அவுட்டாக இது அமைந்துள்ளது.
கடைசியாக 2017-18ஆம் ஆண்டு இந்திய தொடரின் போது செஞ்சுரியன் போட்டியில் புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் முறையில் கோல்டன் டக் அவுட் ஆகியிருந்தார்.
சற்று முன்பு வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 58* ரன்களுடனும், விராட் கோலி 12* ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.